செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் தொடர்கின்ற இருள் நீங்க நடாத்தப்பட்ட அணையாவிளக்குப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் செயலினரின் ஊடக அறிக்கை.
அனைவருக்கும் வணக்கம்.
செம்மணி மனிதப் புதைக்குழிக்கு சர்வதேச நீதி வேண்டியும், தமிழ் சமூகத்திடையே விழிப்பை ஏற்படுத்தவுமாக மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 23,24,25 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட அணையா விளக்குப் போராட்டம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக தாக்கம் செலுத்துகையை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு எம்மோடு துணைநின்ற, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மும்மதங்களின் தலைவர்கள், யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் சிவில் சமூக அமையத்தினர், தமிழ் அரசியல் கட்சிகள், ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகள், வலையொளியாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரச சார்பற்ற தன்னார்வ அமைப்புகள், குடிநீர், உணவு, சிற்றுண்டிகளை வழங்கிய அனுசரணையாளா்கள், அரசியல் – சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வலிகாமம் கிழக்கு மற்றும், நல்லூர் பிரதேச சபையினர், யாழ்ப்பாண மாநகர சபையினர், போராட்டத்திற்குத் தேவைப்பட்ட பொருளுதவிகள் புரிந்த கொடையாளர்கள், எரிபொருள் நன்கொடையாளர்கள், கொட்டகை மற்றும் ஒளி ஒலி வசதிகளைச் செய்துதவியவர்கள், சமூக வலைத்தளங்களில் போராட்டம் குறித்த பதிவுகளைப் பகிர்ந்து பரவலடையச் செய்தவர்கள், இறுதிநேரத்தில் மனிதச் சங்கிலியாக நின்ற நண்பர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் செயலின் சார்பில் சிரம்தாழ்த்திய நன்றிகள். நீங்கள் புரிந்தவைகள், ”காலத்தினால் செய்த, ஞாலத்திலும் மானப் பெரிய உதவி”.
தமிழர் தாயகத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் விடயத்திலும் சர்வதேசத்தின் கவனத்தைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் முகமாக நிகழ்த்தப்பட்ட இப்போராட்டத்தின் இறுதிநாளில் முகம்சுழிக்கவைக்கும் சில துர்நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன. தங்களுக்குள் ஜனநாயகத் தன்மையைப் பேணமுடியாத அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் – அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் தாம்சார்ந்த அரசியல் பின்புலங்களின் இருப்பை முதன்மைப்படுத்தும் நோக்கில் அடிப்படை மனித அறத்திற்கு மாறாக நடந்துகொண்ட முறையானது போராட்டத்தின் செல்வழியை மடைமாற்றி, அதன் வல்லமையை குன்றச்செய்யும் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தமை இப் போராட்டத்தின் ஏற்பாட்டாளா்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியது. களத்திற்கு வெளியிலிருந்த பார்வையாளா்களுக்கு, ஏற்பாட்டாளா்கள் தொடா்பில் கேள்விகளையும் ஏற்படுத்தியது. இத்தகைய பின்னணியில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவா்கள் எனும் வகையில் எதிர்பாராததும், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுமான இவ் அநாகரிக செயற்பாடுகளினால் அசௌகரியங்களிற்கும், கௌரவக்குறைவிற்கும் உள்ளான வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுவினர்களிடமும், பொதுமக்களிடமும், அரசியற் பிரமுகா்களிடமும் எமது உளப்பூர்வமான வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில், அவா்தம் குடும்ப உறுப்பினா்கள் கடந்துவந்த நீண்ட நெடிய, அலைச்சலும் கண்ணீரும் நிறைந்த, கொடிய பயணத்தின் வலிகளது கனதியையும், அவா்களின் போராட்ட நியாயப்பாடுகளையும் அறியாத, ஊடக அறமற்ற சில வலையொளியாளா்கள், தமது காணொளிகளிற்கான பார்வை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பரபரப்பு அல்லது ஒரு குழப்ப நிலையை வலிந்து ஏற்படுத்துவதற்கு ஏதுவான புறச்சூழலை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டமை அருவருக்கத்தக்க விடயமாக அமைந்தது. எதிர்வரும் காலங்களில் போராட்டங்களைத் திட்டமிடும் தரப்புக்கள் இத்தகைய போலி ஊடகா்களைக் கையாள்வதற்கான விசேட பொறிமுறைகளில் கவனம்செலுத்த வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தி நிற்கின்றது.
இத்தகைய நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், போராட்ட நிகழ்விடத்திலிருந்து பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் நேரடிக் காணொளிகள் போராட்டச் சூழலின் உண்மை நிலவரத்தினை மக்களுக்கு விளக்கியது. இந்நிலையில், எத்தகைய கட்சிசார் – அமைப்புக்கள்சார் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்படாது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் விடயத்தில் நீதி கோருவது மட்டுமே இப்போராட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் என்பதும், இக்கோரிக்கையின் பின்னுள்ள அறமும், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளா் வோல்கர் டர்க் (Volker Turk) யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் இக்கால கட்டத்தில் இப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும், புரிந்துகொள்ளப்பட்டது. இதன்விளைவாக நிகழ்விடத்தில் மக்கள் குழுமத் தொடங்கியதுடன் இப்போராட்டம் இன்னொரு பரிமாணத்தினை அடைந்தது. அணையா விளக்கு அனைவரது மனங்களிலும் பற்றிக்கொண்டது. மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் அணையாவிளக்கின் ஒளிக்கீற்றுக்கள் பிரகாசித்தமையை அறிந்திருப்பீர்கள். காலதேவை கருதி சட்டென இதனை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தருகிறோம். இப்படியாக அணையா விளக்கென்பது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும், செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும் சூழ்ந்திருக்கின்ற இருளை நீக்கவேண்டிய அவசியத்தை உலகறியச்செய்திருக்கின்றது.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்தினைப் பார்வையிட்டுத் திரும்புவதனையே அதுவரை தனது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்த ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் நிகழ்ச்சி நிரலை மாற்றி போராட்டம் இடம்பெற்ற களத்திற்கு அவரை வரவைத்தது, இப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ஏற்பாட்டாளா்களின் தீவிர முயற்சி என்பதற்கும் அப்பால் இப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் நீண்ட காத்திருப்பும், இவ் மனிதப்புதைகுழிகளில் புதையுண்டுபோன மக்களின் ஆத்ம பலமுமேயாகும். அந்த ஆத்மாக்கள் புதையுண்டும் பேசிக்கொண்டிருக்கின்றன. நிலம் பிளந்து நீதி கோருகின்றன.
போராட்ட நிகழ்விடத்திற்கு வருகைதந்த ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளா், அங்கு ஏற்றப்பட்டு மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருந்த அணையா விளக்கினை மும்முறை வணங்கி, புதைக்கப்பட்டோரை நினைவுகூா்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தியமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வலியை, அவா்களின் கோரிக்கைகளை ஒத்துணா்வுடன் அணுகியமையையே காட்டுகின்றது. தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே இதனைக் கொள்ள முடிகின்றது. அவர் போராட்டக்காரர்களின் ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய செப்புப் பட்டயத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் அல்லது அவா் வணக்கம் செலுத்தியதுடன் இம் மக்களிற்கான நீதி கிடைத்துவிட்டது என்பது பொருளல்ல. மாறாக, சா்வதேச நாடுகளை உள்ளடக்கிய அமைப்பொன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அவ்வமைப்பில் முக்கிய பதவியில் இருக்கும் தனிநபா் ஒருவரின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டியுளோம் என்பதும், நீண்ட பயணத்திற்கான முதலடியை மக்கள் தன்னெழுச்சியாக எடுத்துவைத்துள்ளனா் என்பதுமே இப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். உலகின் மொத்த மனச்சாட்சியையும் தட்டிப்பார்த்தோம். அரசுடைய தரப்புக்களது நலன்சார்ந்த அரசியலுறவுகளுக்கு முன்னால் எமது நியாயமான நீதி கோரிக்கைகள் அடிபட்டுப்போகின்றன என்பதே அனுபவமாகக் கிடக்கிறது. எனவே எமக்கான நீதியை உலக மாந்தர்கள் ஒவ்வொருவரின் மனச்சாட்சியையும் தொட்டுத் தட்டிக் கேட்கிறோம். பல தலைமுறைகள் கடந்தாவது நாம் கோரும் நீதியின் கதவுகள் திறக்கும் என நம்புகின்றோம்.
கடந்த பதினைந்தாண்டுகளுக்குள் தமிழ் மக்களின் அரசியலுரிமைகளையும், நீதி சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்துப் பல்வேறு கட்டங்களில் மக்கள் திரட்சிப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மக்கள் திரள்வதும், கலைவதும் ஏற்ற இறக்கமாகக் காலக்கணக்கில் வரையப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக அந்த வரைபின் கோலம் தொடர்ச்சியாக இறங்குமுகம் காட்டிவருவதையும் அவதானிக்கமுடிகிறது. இந்த இறங்குமுகம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அசைத்துப் பார்க்கவல்லது. எனவே தான் அணையா விளக்கு போராட்டம் மாதிரியான மக்கள்மயப்பட்ட போராட்டங்கள் இன்றைய சூழலுக்கு அவசியப்படுகின்றன. இந்த அவசியத்தை உணர்ந்து கடந்த 23,24,25 ஆம் திகதிகளில் செம்மணியில் திரண்ட அத்தனை பேருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
மக்கள் செயல்
27.06.2025