என் மனம் நிறைந்து
கிடக்கும் அன்பு அல்லாஹ்வே
உன்னால் முடிந்தால்
திக்கெட்டும் திசையறியாமல்
கிடக்கும் புரையேறிய
மனித மனங்களுக்கு
புண் மருந்து தடவி ஆற்றிக்
கொள்ளும் ஆண்டவனே
கல்லுக்கும் ஈரமுண்டு
என்பார்களே
கலங்காத விழிகள் எங்கே உண்டு?
என்று கேட்பார்களே
இவை எதுவும் இங்கே
இல்லையே கடவுளே
செல்லுக்கும்,
குண்டு மழைகளுக்கும்
எதற்காக எம்மை
பலியாக்குகிறாய்?
உன் பெயர் சொல்லி
புனித யுத்தம்
நடப்பதை நீ அறியாய்
நான் அறிவேன் அல்லாஹ்வே
என் வயசோ ஒன்று
ஆனாலும் நான் அறிவேன்
நான் பசியாற்ற வேண்டும்
வயிற்றை பசி தின்று தீர்க்கிறது
அம்மாவின் குருதியை
உணவாக்கி பசியாற
அவள் முலையைத் தேடுகிறேன்
வாய் வைத்து பால்
பருக கூட
என்னால் முடியவில்லை
தேடித் தேடி கண்கள்
களைத்து விட்டன
ஆனாலும் தேடுகிறேன்
அங்கே கிடக்கிறாள் என் அன்னை
அவளைக் கண்டுவிட்டேன்.
கண்டும் பலனில்லை
பசியாற முடியாது.
அம்மாவின் முலைகள் இரண்டும்
வெட்டி வீசப்பட்டு கிடக்கிறது
அதைக் கண்டு
ஏம்பலிக்கிறேன்…
துடிதுடிக்கும் அந்த
முலைகளின் குருதி ஈரம்
காயும் முன்னே
என் உதட்டோரம்
தொட்டு நின்ற இரும்புத்
துப்பாக்கியின் முனை
எனக்கு பாலூட்ட
காத்திருக்கிறது.
எனக்கு இரும்புத்
துப்பாக்கி சுத்தமாக பிடிக்கவில்லை
என் தந்தையிடம்
முறையிடப் போகிறேன்
இப்போது அவரைத் தேடுகிறேன்
அல்லாஹ்வே…
உன் பாதம் பணியும்
என் தந்தையையும் காணவில்லை
உனக்காக உன் பெயர் சொல்லி
ஊர் முழுக்க
உரிமை காப்பதாய்
எம் உயிரெடுக்கத்
துடிக்கும் இந்த
துப்பாக்கி முனைகள்
குடித்த குருதி போதாதென்று
என் தந்தையையும் உண்டு
தின்று விட்டதா?
அல்லாஹ்வே,…
இரு வெடிப்புச் சத்தம்
கேட்டு ஓய்ந்து விட்டது…
ஐயோ…
என் விழிகளுக்கு என்ன நடந்தது?
எதையும்
பார்க்க முடியவில்லை.
செவிகளுக்கும் ஏதோ நடந்துவிட்டது
ஊர் முழுக்க வெடித்துச் சிதறும்
இரும்புத் துண்டுகளின்
சத்தம் எனக்கு இப்போது கேட்கவே இல்லை.
கரங்களை கால்களை
அசைத்துப் பார்க்கிறேன்.
அருகில் என் மடியில்
கிடந்த என் ஆசை
அக்கா எங்கே…?
அவளை என்னால்
ஸ்பரிசிக்க முடியவில்லை
தடவிப் பார்க்கிறேன்
விழிகளைத் திறக்க பார்க்கிறேன்.
எதுவுமே என்னால்
முடியவில்லை …
ஓ …! நானும் இறந்து விட்டேனா?
என் உதடுகளும்
அல்லாஹ்வின் பெயரில்
இரும்புத் துண்டை
சுவைத்து விட்டதா?
ஓ…! நானும் என் சிவந்த
குருதியை சிரியா மண்ணிலே
புனித போருக்காய் சிதற விட்டேனா?
தெரியவில்லை.
ஆனாலும் ஒரே வேண்டுகை
உலகமே…
இது தமிழீழமல்ல நீ
உரிமைக்காக குரல்
கொடுத்தோரை
வேடிக்கை பார்த்து
ஒன்றாயிணைந்து
அழித்தொழிக்க
இது “அல்லாஹ் ”
பெயருரைத்து பொருளே இன்றி
நடாத்தப்படும் புனிதம் என்ற
புனை பெயர் கொண்ட யுத்தம்
நீ வேடிக்கை பார்க்கத் தேவையில்லை
நெட்டி முறித்து
சோம்பல் முறித்து
தூக்கத்தில் இருந்து எழுந்து வா
என்னை காத்திட உன்னால்
முடியவில்லை
என் இனத்தையாவது காத்திடு…
கவிமகன்.இ
26.02.2018