தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காவும் போராடிய நாமே அந்நிய மொழியில் கையெழுத்திடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் தீபச்செல்வன்.
வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறியில் கலந்துகொண்டு மொழிவளம் என்ற தலைப்பில் இடம்பெற்ற பயிற்சி அரங்கு குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துரைத்த தீபச்செல்வன்,
உலகில் பல இனங்கள் தமது தாய்மொழியில் கையெழுத்திடும் வழக்கத்தை கொண்டுள்ளன என்றும் இலங்கையில் இனத்திற்காகவும் மொழிக்காவும் மிகப் பெரிய அளவில் போராடிய தமிழர்களாகிய நாம் எமது தாய்மொழியான தமிழில் கையெழுத்திடாமல் அந்திய மொழியில் கையெழுத்திடுகிறோம் என்று தீபச்செல்வன் கூறிய கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட பட்டதாரி ஆசிரியர் பெரும்பாலானவர்களின் கையொப்பங்களும் ஆங்கிலத்திலலேயே இடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தாய்மொழிக் கையெழுத்து குறித்து விழிப்புணர்வற்று நாம் நமது கையெழுத்துக்களை இழந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கையெழுத்து என்பது இனத்தின், மரபின், மொழியின் அடையாளம் என்று கூறிய அவர், தற்போது எமது மாணவர்களை எமது தாய் மொழியான தமிழில் கையெழுத்திடும் சிந்தனையை தூண்ட வேண்டும் என்றும் அது ஆசிரியர்களின் கடமை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய வவுனியா தெற்கு கல்விப் பணிப்பாளரும் இப் பயிற்சி நெறியின் இணைப்பாளருமான மு. இராதாகிருஸ்ணன், இந்த விடயம் குறித்து நாம் சிந்திப்பது அவசியமானது என்றும் இனிவரும் காலத்தில் எமது பிள்ளைகளை தாய் மொழியில் கையெழுத்திட நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
நம்மில் பெரும்பாளானவர்கள் ஆங்கிலத்திலேயே கையெழுத்திடுவதாகவும் தாய்மொழியில் கையெழுத்திடுவது குறித்து சிந்திக்க முன்னோர்கள் வலியுறுத்தவில்லை என்றும் குறிப்பிட்ட கல்விப் பணிப்பாளர், தான் யப்பான் சென்றபோது, தனது கையெழுத்தைப் பார்த்து, இரோசிமா நாகசாகி காலத்தை சார்ந்த முதியவர் உனது தாய்மொழி எதுவுவென கேள்வி எழுப்பியதாகவும் நினைவுகூர்ந்தார்.
கடந்த மார்ச் மாதம், நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்சேவைப் பயிற்சி கடந்த டிசம்பர் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 21 நாட்கள் இடம்பெறும் இந்தப் பயிற்சி வாண்மைத்துவமான ஆசிரிய சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண கல்விப் பணிமனையால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.