யாருடா இந்த நேரத்தில…? கணவன் கேட்டதற்கான பதிலை உரைக்க முன் கைபேசியை கையில் எடுத்து கொண்டாள் கமலா. ம்ம்ம் சொல்லுங்க அக்கா என்னது நாட்டுக்கு வாரீங்களா? எப்ப? ம்ம்ம்ம் சரி சரிக்கா நான் எல்லாம் ஏற்பாடும் பண்ணுறன் நீ இங்க தானே நிற்பாய் அல்லது அத்தான் வீட்டுக்கு போடுவியா? ஒகே அக்கா நான் எல்லாம் செய்யறன். தொலைபேசி துண்டிக்கப்பட கணவனை எழுப்பி தனது சகோதரி கூறிய அத்தனையையும் ஒப்புவிக்கின்றாள் கமலா. ஏய் சும்மா படுப்பா. மனிதத்தனம் இல்லாதவர்கள் வாறத்துக்கு இப்பிடி குதிக்கிறா மறந்திட்டியா நடந்ததுகள…? அவை வந்து ஒரு வாரம் நிக்கிறதுக்கு லட்ச கணக்கா செலவு பண்ண சொல்லுறியா? சும்மா படுப்பா. கணவனின் நினைவூட்டலுக்கு பின் தான் சகோதரி குடும்பத்தின் சுயரூபம் அவளுக்கு மனதில் விழித்தெழுந்தது.
ம்ம்ம்ம் அந்த நாளின் நினைவு மறக்கப்பட முடியாதது.
இவ்வாறு தான் அன்றொரு நாள் மனிதமே அற்று அவர்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அக்கா ரிங் போகுது இந்தாங்கோ…. வெளித் தொடர்புகளும் அற்ற நிலையில் கம்பிக்கூட்டுக்குள் அடைபட்டு கிடந்த போது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படும் கைபேசி ஒன்றில் இருந்து பலநூறு ரூபாக்களை செலவு செய்து தனக்கான மீள் குடியமர்வு அனுமதி கிடைத்த தகவலை தெரிவிக்க தனது சகோதரிக்கு தொடர்பேற்படுத்துகிறாள் கமலா.
அக்கா நான் கமலா பேசுறன் எப்பிடி இருக்கிறீங்கள். மறுமுனை மௌனத்துக்குள் இருந்தது… “அக்கா நான் கமலா… மூன்று முறை அழைப்புக்கு பின் குரலை சரிப்படுத்த செருமிய படி ஒரு ஆண் குரல். எதுக்கு எடுத்தாய் இப்ப உனக்கு என்ன வேணும்? யாரு அத்தானா? எப்பிடி இருக்கிறீங்க நான் கமலா பேசுறன். புரியுது என்ன வேணும் உனக்கு என்னிடம் இங்க ஒரு ரூபா கூட இல்ல போன மாசம் தான் பிள்ளைக்கு சாமத்தியவீடு செய்தனான் எல்லாம் அதுக்குள்ளே போட்டுது உங்களுக்கு நெடுக அனுப்புறதுக்கு இங்க என்னிட்ட ஒரு சதம் கூட இல்ல வை போனை என்னோட பிள்ளைக்கு நான் சடங்கு செய்யும் போது ஒரு வாழ்த்து சொல்லுறதுக்கு வக்கில்ல வாங்குறதுக்கு என்றா உடனே இங்க அடியுங்க…
அடித்து வைக்கப்பட்ட தொலைபேசியில் அவள் பேச வந்த அனைத்தும் நொறுங்கி போய் கிடந்தது. நான் இவர்களிடம் காசு வாங்கவா அடித்தன். ஒரு இரத்த உறவுகளின் பிணைப்பு பணம் என்ற கருவி கொண்டா இணைக்கப்படுகிறது? பணம் இல்லையேல் துடிக்கும் உயிர் கூட உறவுகளால் கைவிடப்படுமா? பல வினாக்கள் அவளது மூளை அடங்கிய மண்டையோட்டை போட்டு குழப்பிக்கொண்டிருந்தது. எனது அக்காவுமா? சாதாரண மனித பிறவி என்ற வரையறைக்குள் அடங்கி போய் விட்டாள். எனது பிள்ளை இறந்து முழுமையாக இன்னமும் பத்து மாதங்கள் கூட ஆகல்ல அதற்குள் பெரும் எடுப்பாக எப்படி இவர்களால் பிள்ளைக்கு சடங்கு செய்ய மனசு ஒத்து கொண்டது?
முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழன் செத்து அந்த ஈரம் காயும் முன்னே இவர்களால் மட்டும் எப்படி சந்தோசமாக விழாக் காண முடிந்தது? வினாக்களின் தொகுப்பு அவளது இதயத்தில் தொடர்ந்து கொண்டே போனது. அவளது மனதின் நினைவுகளை போல…. மகனின் நினைவுகளால் விழியில் மழை நீராய் பெருக்கெடுத்தது கண்ணீர்.
அன்று அசுரனை அழித்து மானுடத்தை காத்த கிருஷ்ணனின் வெற்றி நாளாக சித்தரிக்கப்படும் தீபாவளி நாள். அன்றைய பொழுது இவர்களுக்கும் பண்டிகைக்கான வாணவேடிக்கைகள் பட்டாசு சத்தங்களுடன் விடிந்தது ஆனால் அவர்கள் அனைவரும் தமது தீபாவளி கொண்டாட்டங்களை தமது பதுங்கு குழிக்குள் அடக்கம் கண்டே கொண்டாடி கொண்டிருந்தார்கள். தாயக மீட்புக்காக போராடும் மீட்பர்கள் மற்றும் தாயகத்தை வன்பறிப்பதற்காக முயலும் வன்முறையாளர்கள் என்ற இரு தரப்புக்களும் செய்து கொண்டிருந்த யுத்தம் என்ற கொண்டாட்டத்தின் முடிவில் பதுங்கு குழிகள் மட்டுமே இவர்களது இருப்பிடங்களாகி போயின. கண் முன்னே பிண்டங்களாக பிரித்தெறியப்பட்ட உடல் துண்டுகளின் கோரங்களை கண்டு உறைந்து போய் கிடந்த படியே அந்த பிரதேசம் தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு கொண்டிருந்தது.
அந்த தீபாவளி நாளன்று தான் இவர்களது கருவில் உதித்தவனின் குருதி குடித்து சென்றது பாய்ந்து வந்த ரவை ஒன்று. குருதி கட்டுப்படுத்தி அவனை காப்பற்றிட போராடி தோற்று போயினர் மருத்துவர்கள். வீழ்ந்தவனை மண்ணுக்குள் எருவாக்க கூட திராணியற்றவராய் அங்கயே போட்டுவிட்டு கைக்குழந்தையாய் இருந்த மறு கருவை காத்திட என்று ஓடி வந்த போது நீண்டு சென்ற ஓட்டமும் வலிகளும் நிறைந்த அந்த தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவு கண்டிருந்தது. பட்டாசு ஒலியோ ஒளியோ அற்ற வேதனைகளும் இறப்புக்களும் தொலைந்து போகும் வலிகளும் மட்டும் கொண்ட கம்பி கூட்டுக்குள் அடைக்கப்பட்ட போதும் தன் உயிரில் ஒன்றிவிட்ட ஒரு உயிரை எனிலும் காத்து வந்த ஆறுதலில் அவள் உறக்கம் கண்டாள்.
இத்தனை வருட வாழ்வில் அவள் யாரிடமும் கையேந்தியது கிடையாது அவளை கையேந்தும் நிலையில் தந்தையோ அல்லது கணவனோ விட்டதும் கிடையாது. இல்லை என்றாலும் இருப்பதை விற்று அவர்கள் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டே இருந்தார்கள். இவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஊன்றுகோல்களாக இருந்தவர்கள் அல்ல ஆனாலும் போராட்டத்தின் மீதும் எமது விடிவு மீதும் அதீத நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவர்கள். அதனால் தான் என்னவோ அவர்களும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி கொண்டிருந்தார்கள். காத்து வந்த குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு நோயை மாற்றுவதற்காக செய்யப்பட்ட மருத்துவ செலவுக்காகவே முதன் முதலாக தனது சகோதரியிடம் கையேந்துகிறாள் கமலா ஒரு பிள்ளையை பறி கொடுத்து மறு பிள்ளையை காக்க முடியாது திணறிய போதே தனது தமக்கையின் உதவிக்காக கரம் நீட்டியவளின் இன்றைய நிலை அவளது அழைப்புக்கு பதில் கூற கூட முடியாது இவளது குரலுக்கு செவி சாய்க்காது தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் கொடியதாக மாறி இருந்தது.
அந்த நிகழ்வின் பின்னான இந்த ஐந்து வருட காலத்தில் எப்போதாவது வரும் தொலைபேசி அழைப்புக்களில் சகோதர பாசத்தை காட்ட முனையும் சகோதரிகளாக மட்டும் பயணப்பட்டு கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் கமலாவின் வாழ்வாதாரங்கள் கணவனால் மீண்டும் மேன்மைப்படுத்தப்பட அவளும் தனது குழந்தை கணவன் என்ற வட்டத்தை விட்டு வெளிவராமல் இருக்க பழகி கொண்டாள். தனது மகனின் கற்றலில் மட்டும் அதிக அக்கறை கொண்டவளாய் அவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஊன்று கோலாக நிற்க முனைந்து கொண்டிருந்தாள். ஆனால் இவளின் சகோதரியோ மேற்கத்தைய நடைமுறைகளை மட்டுமே பிள்ளைகளுக்கு ஊட்டியிருந்தாள் அதனாலோ என்னவோ மூத்த பிள்ளையாக உருவெடுத்த அவளின் வாழ்க்கை சந்ததி மூன்றும் தமிழ் கலாச்சாரத்தை மீறிய குழந்தைகளாகவே பயணப்பட்டு கொண்டிருந்தார்கள். இனம் மாறிய வாழ்க்கை துணை சுத்தமாக நாக்கில் ஒட்டாத தமிழ் பேச்சு என்று அவர்களின் வாழ்கை முறை முற்று முழுவதுமாக ஆங்கில கலாச்சாரத்துக்குள் அமிழ்ந்து போய் கிடந்தது. பிள்ளைகளை கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களுக்கான முடிவை தாம் எடுக்கவோ முடியாத நிலையில்தான் சிறிது காலம் என்றாலும் அந்த நாட்டை விட்டு பிரிந்திருந்து பிள்ளைகளின் போக்கை மாற்றுவதற்கு பெற்றவர்கள் முடிவெடுத்திருந்தனர். அதற்கான பயணப்பாடே இப்போது தயாராகி கொண்டிருக்கின்றது. காலை சேவல் கூவிய ஒலி கேட்டு நினைவில் இருந்து மீண்டாள் கமலா.
தாம் வந்து தங்குவதற்கான தாயார் படுத்தல்களுக்காகவே அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களால் கமலா வீடு நிரம்பி வழிகிறது தங்கைச்சி நாங்க வார நேரம் தான் தீபாவளி வருகுது நிறைய பட்டாசு வானவெடி எல்லாம் வாங்கி வை என்ட பிள்ளையளுக்கு பட்டாசு என்றா ரம்ப பிடிக்கும் தீபாவளி கொண்டாடுவம் எல்லாரும் சேர்ந்து. தமக்கையின் வேண்டுகோள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதில் முனைப்பு கொண்டாள் அவள். அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டிருந்தன “அவர்கள் எங்களை பணத்துக்காக பழகினது என்று கைவிட்டவை அவைக்காக இப்பிடி எல்லாம் செலவு பண்ணுறியே” என்ற கணவனுக்கு “இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னையம் செய்துவிடல்” என்று கூறி அவனது போக்கை மாற்றி வெற்றி கண்டாள் கமலம்.
கனா கண்டவர்களாய் தமது சொந்த ஊர் நோக்கி புறப்பட்ட சிறுசுகளும் பெரியவர்களும் இயற்கையின் அன்னையால் சூழப்பட்டு குளிர்மையும் அமைதியும் மிக்க அந்த வீட்டை அடைந்த போது எண்ணற்ற மகிழ்வில் திளைத்து போனார்கள் எமது தாயக பூமி இத்தகைய இயற்கை வளம் பொருந்தியதா என்ற வினாவே அவர்கள் மனதில் எழுந்து நின்றது. ஆனாலும் அவர்களால் அந்த சூழலில் ஒத்து போக முடியவில்லை வெண்மை படர்ந்த பனிகட்டிகளும் குளிர்மையுமே அவர்களுக்கு வேண்டியவையாக இருந்தன இருப்பினும் அவர்கள் அந்த சூழலில் பிடிக்காமலே வாழ தொடங்கினர் சிறிது காலமே என்ற நினைப்பில்.. அவர்களின் வருகையும் தீபாவளி கொண்டாட்டமும் அந்த வீட்டையே மகிழ்ச்சியில் மூழ்கடித்து கொண்டிருந்த போது தான் “நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று சொல்லி செல்வதை போல திருவுருவப்படமாக சுவரோடு ஒட்டி இருந்த கமலாவின் மகன் கார்த்தி நிலத்தோடு வீழ்ந்து நொறுங்கி போகிறான்.
– கவிமகன்.இ