வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமிக்கப்பட்டமைக்கு ரெலோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த நியமனம் தொடர்பாக ரெலோ அமைப்பின் செயலாளரால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
நான்கு கட்சிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கும் வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் எமக்குரிய ஆசனத்தை எமது கட்சியிலிருந்து யார் நிரப்ப வேண்டும் என்பது முற்று முழுதாக எமக்குரிய விடயமாகும்.
ஒருவேளை எம்மால் பிரேரிக்கப்படுபவர் தொடர்பில் ஏதாவது மனவிலக்கு முதலமைச்சர் என்ற முறையில் தங்களுக்கு ஏற்பட்டு அதனை நீங்கள் தெரிவித்திருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து எமது நியமனத்தை நாங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியிருப்போம்.
ஆனால், எம்மால் பிரேரிக்கப்பட்டிருப்பவர் தொடர்பில் அப்படி எதுவும் தங்களுக்குக் கிடையாது என்பது தெட்டத் தெளிவானது.
தங்களின் குறித்த கடிதமும் அதனையே தெரிவித்து நிற்கின்றது. இந்நிலையில் எங்கள் பெயரில் உங்கள் தெரிவாக எவரையும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வடமாகாண அமைச்சரவை அமைக்கப்பட்ட பொழுது எமது கட்சியின் சார்பிலும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பிலும் அதில் நியமிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களல்ல. மாறாக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதனுடைய விளைவுகள் நாம் எல்லோரும் அறிந்தவையே.
இப்பொழுது எமது கட்சியின் சார்பில் எமது மாகாண சபை உறுப்பினரொருவரை நீங்களே தேர்ந்தெடுத்து அமைச்சராக்குவது என்பது குறித்த நியமனத்தை எம்மீது பலவந்தமாகத் திணிக்க முயற்சிப்பதாகவே முடியும். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அனுமதிக்கவும் மாட்டோம்.
இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் தவறை நிவர்த்தி செய்ய நீங்கள் முன்வர வேண்டும். வடமாகாண சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டுச் செயலாற்றுவதற்கு இது அவசியமானது.
எமது கட்சிக்குச் சுயமரியாதையுண்டு. எந்தச் சூழ்நிலையிலும், எந்தக்காரணத்திற்காகவேனும் அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.