முல்லைத்தீவு முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளத்திற்கு அருகில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அப்பிரதேசத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள்சென்றுள்ளனர்.
இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தகரங்கள் தரலாம் என இராணுவ சிப்பாய் ஒருவர் கூறியதற்கு அமைவாக நான்கு பேரும் சென்றுள்ளனர்.
இராணுவ முகாமிற்குள் இளைஞர்கள் சென்ற நிலையில் முகாமில் இருந்த இராணுவத்தினர் நால்வர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனால் அந்த நால்வரும் திக்குத் திசை தெரியாமல் ஓடியுள்ளனர். அவர்களில் மூவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர். மற்றையவர் காணாமல் போயிருந்தார்..
காணாமல் போனவர் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் , ஊரவர்களும் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை அதிகாலை காணாமல் போன இளைஞன் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்படி இளைஞனின் சகோதரரால் இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரி வித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசா ரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் ஏழு மாதக் குழந்தையின் தந்தையாவார்.



















































