அது யாழ் மாவட்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மாவட்டத்திலுள்ள வங்கி.
அதன் முகாமையாளர் என்னுடன் உயர்தர வகுப்பில் ரியூசனில் ஒன்றாகப் படித்தவர். நான் பழகிய வகையில் நாணயமானவர்.
நான் வேலை முடிந்து அன்று பஸ் ஏற மாலை 5.30 மணியாகி விட்டது.
பஸ்சில் வந்த அறிமுகமான வங்கி உத்தியோகத்தரிடம் அந்த முகாமையாளரின் சுகநலன் விசாரித்தேன்.
ஏன் அண்ணை உங்களுக்கு விசயம் தெரியாதா?
நான் அவருக்கு ஏதும் நடந்ததோ என ரென்சனாகிப் போனேன்.
ஏன் என்னவெனப் பதட்டமாகக் கேட்டேன். அவர் மீற்றர் வட்டிச் சுழியில் அகப்பட்டு பல கோடி ரூபாவை ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு எங்கோ ஓடி விட்டார் என்றனர்.
எப்படி இது நடந்தது எனக் கேட்டேன்.
யாழ் நகரின் புறநகரிலுள்ள அவர் தனக்குப் பழக்கமான ஒருவருக்கு வட்டிக்குக் காசு கொடுத்து வந்துள்ளார்.
அவரும் இவருக்கு மாதாந்தம் உயர்ந்த வட்டியைச் சுருக்கமாககச் சொன்னால் மீற்றர் வட்டியைக் கொடுத்து வந்துள்ளார்.
உதாரணமாகச் சொன்னால் ஒரு இலட்சம் ரூபா கொடுத்தால் மாத முடிவில் 15000 ரூபாவை வட்டியாகக் கொடுத்தார்.
நல்ல வட்டி வருமானம் வருகிறதென மேலும் மேலும் கொடுத்தார்.
அவரும் இவரிடம் வாங்கி பலரிடம் கொடுத்து ஒழுங்காகக் கொடுக்க இவரும் தனது சகோதரர்களிடமும் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
அதிக வட்டி வருகிறதென்ற ஆசையில் நகை நட்டு காணி பூமியெல்லாம் அடைவு வைத்து வட்டிக்குக் கொடுத்து வந்துள்ளார்.
இவரும் தனது வங்கி உத்தியோகத்தர்களிடமும் காசு வாங்கிக் கொடுத்து வட்டி வட்டாரமும் பெருகத் தொடங்கியது.
அதிக வட்டி வருகிறதென்ற ஆசையில் அண்ணன் தம்பியிடம் அயலான் யாவரிடமும் வாங்கி வட்டிக்குக் கொடுத்தனர்.
சில வங்கி உத்தியோகத்தர்கள் தமது பெயரில் 40 , 50 இலட்சமென சொத்துக் கடன்கள் எடுத்தும் இவர் மூலமாகக் கொடுத்து வட்டி பெற்று வந்தனர்.
ஆசை கூடி மற்றவர்களைப் போல வீடு, வளவை ஈடு வைத்தும் கொடுத்தனர்.
இவர்கள் மூலமாக பல பல கோடிகளைப் பெற்று மீற்றர் வட்டி கொடுத்த அந்த ஆசாமி திடீரெனக் காணாமல் போய் விட்டார்.
அவர் வருவார் வருவாரென இவர் வாரங்கள் பல கடந்து மாதங்கள் சில கடக்கக் காத்திருந்தார்.
ஆனால் தொடர்பு ஏதுமில்லை. ஆசாமி எஸ்கேப்.
இந்த முகாமையாளரை நம்பிக் காசு கொடுத்த உத்தியோகத்தர்கள் நட்பு வட்டாரங்கள் மாதா மாதம் சுளையாக வந்த வட்டியும் இல்லை.
முதலைப் பற்றியும் கதையைக் காணவில்லை.
அவரை நெருக்கியடித்து தமது ஆழுத்தங்களைப் பிரயோகித்தனர்.
இந்த முகாமையாளருக்கு வேறு வழி தெரியவில்லை.
வேறு ஒரு வங்கியில் உயர் பதவி வகித்த தனது மனையாளுடன் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு நாட்டை விட்டு எங்கோ ஓடி விட்டார்.
யாருமே கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு நாட்டில் நிற்கின்றார்.
அவரை நம்பிக் காசு கொடுத்தோர் , தமது உறவுகள் நெருக்க கடன் தந்தோர் இடிக்கச் சொத்துப் பத்துகளை விற்று ஒட்டாண்டிகளாகி விட்டனர்.
சொந்த வீடுகள் இரண்டு வைத்திருந்தோர் அவற்றை இழந்து வாடகை வீட்டுக்கு வந்து விட்டனர்.
சிலர் மனஉளைச்சலால் தீராத நோயாளியாகி விட்டனர். சிலரது குடும்ப உறவுகள் மாரடைப்புத் தாக்கத்திற்குக் கூட உள்ளாகி விட்டனர்.
இவ்வளவு கதைகளையும் கேட்ட நான் கேட்டேன் ” சட்டபூர்வமான பணப் பரிமாற்றத்திற்கு 100 வீதம் பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் எப்படி மீற்றர் வட்டிக்காரர்களிடம் அகப்பட்டுக் கொண்டீர்கள்.
நாட்டில் ஏனைய துறையினருடன் ஒப்பிடுகையில் நீங்கள் கைநிறையச் சம்பளம் வாங்குபவர்கள். பல மில்லியன் ரூபாக்கள் மிகவும் குறைந்த வட்டியில் கடனாகவும் பெறும் வசதி உடையவர்கள்.
நீங்களே இப்படி அகப்பட்டுக் கொண்டால் சாதாரண பொதுமக்கள், வியாபாரிகளை எவ்வாறு வழிப்படுத்துவீர்கள்.
எமது பேராசை தந்த பெரும் தரித்திரம் தான் இது. ஊத்திண்ட பாலுக்கு இனி அழுது பிரயோசனமில்லை என்று கவலை தெரிவித்தனர்.
பிற்குறிப்பு – இப் பதிவு தொடர்பாக உங்கள் அபிப்பிராயங்களைத் தாராளமாக இடலாம்.
தயவு செய்து அந்த வங்கி எது, அந்த முகாமையாளர் யார் என்ற பெயர் விபரங்களை இட வேண்டாம்.
நண்பர்களே நீங்கள் கண்ணியமானவர்கள். அவ்வாறு செய்ய மாட்டீர்கள்.