இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை
ஆனாலும் உழைத்தார்கள்
இவர்களுக்கு விடுமுறைகள் பெரிதாய் கிடைப்பதில்லை
ஆனாலும் உழைத்தார்கள்
இவர்களின் வேலைகள் இலகுவாய் இருந்ததில்லை
ஆனாலும் உழைத்தார்கள்
உதிரங்கள் சொரியச் சொரிய
உடலங்கள் சரியச் சரிய
உறக்கங்கள் தொலையத் தொலைய
உழைத்தார்கள்
இவர்களின் உழைப்பில் அவர்தம்
குடும்பம் வாழ்ந்ததில்லை
ஆனால் தேசம் வாழ்ந்தது
அவர்களின் உழைப்புக்குச் சம்பளமாய்
வெற்றி வழங்கப்பட்டது
அவர்களின் பசிக்கு உணவாய்
இலட்சியம் ஊட்டப்பட்டது
இன்று கல்லறைகளினடியில்
கண்மூடி உறங்கும் பலரையும்
அன்று வெஞ்சமராடி விழுப்புண் அடைந்த
பலரையும் இன்று நாங்கள்
மறந்துவிட்டோம்
தேச விடுதலைக்காய் தேகம் கொடுத்தவர்க்கு முன்
எங்கள் சம்பளத்துக்கு வேலைசெய்யும்
சாதாரண வேலைகள் தரம் குறைந்தவை
என்பதை மறந்துவிட்டோம்
இவர்கள் வித்துடலின் மேல்
விடுதலை பெற்ற வாழ்க்கையை
சுகிப்பதற்கு முன்
அவர்களை நினைத்துப்பாருங்கள்
– #அனாதியன்-